PARIS JAYARAJ (TAMIL) MOVIE REVIEW
சந்தானம் நடிப்பில் ஏ-1 திரைப்படத்தை இயக்கியவர் ஜான்சன்.கே. அப்படம் காமெடியில் பட்டையைக் கிளப்பியதை அடுத்து இதே காம்போ இப்போது கே.குமாரின் தயாரிப்பில் இந்த ‘பாரிஸ் ஜெயராஜ்’ படத்தில் இணைந்துள்ளது. படம் எப்படி இருக்கு?
வடசென்னை பின்னணியில் நடக்கும் இந்த கதையில் வியாசர்பாடி, புளியந்தோப்பு, பாரிஸ் உள்ளிட்ட ஏரியாக்களில் கானா பாட்டுகள் பாடும் ஹீரோதான் 'பாரிஸ் ஜெயராஜ்' (சந்தானம்). கானா பாடலுடன் மாநகர பேருந்தில் அறிமுகமாகும் சந்தானம் தர லோக்கலாக சஷ்டிகா ராஜேந்திரனை கரெக்ட் செய்கிறார். ஆனால் சஷ்டிகாவின் தந்தை சிவாஜியின் சூழ்ச்சியால் அந்த காதல் 'புட்டுக் கொள்ள' அடுத்து அறிமுகமாகும் அனைனா சோதி சந்தானத்தை கல்லூரி விழாவில் பாட அழைக்கிறார். அனைனாவின் 'சூப்பர் குட்' மோட்டிவேஷனால் மூடு மாறி, லவ் மோடுக்கு செல்லும் சந்தானத்துக்கு அனைனாவின் காதல் தெரிய வருகிறது. அந்த காதலுக்கு சந்தானத்தின் தந்தை ‘வக்கீல்’ பிருதிவ் ராஜ் வேட்டு வைக்க சந்தானத்தின் ரூட் க்ளியராகிறது.
அதன் பிறகு அறிமுகமாகும் மொட்ட ராஜேந்திரன் மற்றும் பிருதிவ் ராஜினால் இடைவேளையில் உண்டாகும் மிகப் பெரிய 'கலாச்சார ட்விஸ்ட்' ஆகியவற்றால் தன் காதலில் ஏற்படும் பிரச்சனைகளை, கானா பாடல்களுக்கு நடுவே பயணிக்கும் கதையில் அமர்ந்து எதிர்கொள்ளும் சந்தானம், அனைனாவை அடைகிறாரா என்பதே இந்த பாரிஸ் ஜெயராஜின் மீதிக் கதை. கதைதான் வீரியமின்றி இருக்கிறதே தவிர, திரைக்கதையில் சாதுரியம் காட்டியிருக்கிறார்கள்.
டைட்டில் கார்டு தொடங்கி படம் முழுவதும் பிண்ணனி இசையில் புழுதி கிளப்புகிறார் சந்தோஷ் நாராயணன். ஆர்துர் வில்சனின் ஒளிப்பதிவு தூரமான காட்சிகளிலும் தரமாகவே இருக்கிறது. ரோகேஷ், அசல் கொலார் பாடல் வரிகளில் டான்ஸில் சிதற விடுகிறார் சாண்டி. க்ளைமேக்ஸில் இன்ப அதிர்ச்சியும் தருகிறார். எடிட்டர் பிரகாஷ் மப்பா இன்னும் கொஞ்சம் கத்தரி போட்டு படத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம்.
தமிழ் சினிமாவை பொறுத்தவரை இந்த கதை கலாச்சார ரீதியாக கத்திமேல் நடப்பது போன்றது. ஆனாலும் இதை சுவாரசியமாக திரைக்கதைப் படுத்தியுள்ள விதமும் இறுதியில் கதையில் அவிழும் முடிச்சுகளும் செம்ம பா(ரி)ஸ். கானா பாடல்கள் வடசென்னை மார்க்கமாக இருந்தாலும் இப்படத்தை ஜாலியாக குடும்பத்துடன் அனைத்து பகுதி பார்வையாளர்களும் பார்க்கலாம். சிரித்து மகிழலாம்.

0 Comments